Sunday, July 18, 2010

காதலும் கடவுளும் ஒன்று

கடவுள் தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பாராம்
காதல்?

சமைக்கும் அவசரத்தில்
குழம்பு காரமானாலும்
உப்பு குறைந்து போனாலும்
மிச்சம் வைக்காமல்
என்னை வையாமல் நீ
சாப்பிட்டு முடிக்கும் தட்டில்...

நான் வீடு வர நேரமாகியதால்...
எனக்கு பசிக்கும்...
எனக்கு பிடிக்கும் என்று....
சமைக்க தெரியாமலும்
நீ சமைத்த
கருகிய அந்த கத்திரிக்காய் பொறியலில்...

குளிர் தாங்க மாட்டேன்...
இரவில் பல முறை
நீ எழுந்து ,
என்னை எழுப்பாமல்
மெல்ல சரி செய்யும்
கலைந்த என் போர்வை மடிப்புகளில்...

உனக்கு புரியாத என் மொழி
நகைச்சுவை திரைப்பட
காட்சிகளை தொலைக்காட்சியில்
நான் பார்த்து சிரிக்க
என் சிரிப்பில் பூக்கும்
உன் புன்னகையில்....

உன்னை விட்டு
சிறிது நேரம்
நான் விலகினாலும்
என்னை விலக்காமல்
என்னையே சுற்றி சுற்றி விளையாடும்
உன் நினைவுகளில்...

அங்கிங்கெனாத படி
எங்கும் இப்படி
உன் காதல் நீக்கமற
நிறைந்து இருப்பதினாலேயே
காதலும் கடவுளும் ஒன்று... உன்
காதலும், கடவுளும் ஒன்று.