Tuesday, April 21, 2009

என்ன அநியாயம்!

நியாயமாக
நீ வரும் நாளே
பௌர்ணமி என்றிருக்க வேண்டும்
நிலா வரும் நாளை
பௌர்ணமி என்கின்றனரே?

Thursday, April 9, 2009

அழகி

அள்ளி அவசரமாக
முடிந்த ஈர கூந்தல்
அகல குங்கும பொட்டு,
மஞ்சள் தங்கிய முகம்
மங்களம் பொங்கும் முகம் ...

'வயது அறுபதானாலும், இன்றும்
என் பெண்டாட்டி - அழகு தான்,
வடிவு, ரொம்ப வனப்பு தான்'
தாத்தா சிரிக்க பாட்டி
வெட்கத்தில் இன்னும் சிவந்து போவாள்

பேரபிள்ளைகள் நாங்கள் அனைவரும்
பாட்டி கையால் நிலாச்சோறு , பின்
படுக்க போகும் முன் கதைகள் கேட்டு
படுத்த பின்னரும் ஓயாமல், உறங்கி
போகும் வரை பேச்சு என்றிருப்போம்

அது ஒரு காலம்...

படிப்பிற்காக பட்டணம் வந்து
பின் வேலை குடும்பம்
பிள்ளை பொறுப்பு என்று
பல வருடம் கடந்து விட்டது

இன்று...

பங்காளி தகராறில் சொத்துக்கள்
பிரிக்கப்பட்டு எங்களுகென்று எழுதிய
பங்கு வாழைத்தோப்பினை ஒத்துக்கொள்ள
பிறந்த ஊருக்கு அப்பாவுடன் திரும்பினேன்

வெகு நாள் கழித்து...
சொந்த ஊர்...

மாற்றங்கள் பல...
வயல் வெளி சுருங்கி
வீடுகள் பெருகி...
பசுமை குறைந்து
பட்டணத்தின் அடையாளங்கள்...

வீட்டை நெருங்க...
நெஞ்சினில் நினைவுகளின் பெருக்கெடுப்பு...
நம் வீடும் மாறி இருக்குமோ
உறவுகளும் மறந்து போயிருக்குமோ
உள்ளுக்குள் குறுகுறுப்பு...

மாறி தான் போய் இருந்தது...
முன்பு தெருவிலேயே பெரிய வீடு
சுற்றிலும் பெரிய வீடுகள் வந்தவுடன் - இன்று
சற்று சிறியதாக தெரிந்தது

வாசலில் வரவேற்ற துளசி
வாடி போய் இருந்தது...
வேப்ப மரத்தினையும்
வெட்டி விட்டார்கள் போல... காணோம்...

பழைய பொலிவு இல்லை...
வாசல் படியில்... என் பாட்டி...

பொக்கை வாய் ...
பார்வையிலும் கோளாறு போல
பார்த்தது கண்ணை சுருக்கி தான்
நரை நிறைந்து போன தலை
நடையிலும் சிறு தள்ளாட்டம்...

ஆயினும் , எங்களை பார்த்தும்
அப்படி ஒரு சிரிப்பு
அவ்வளவு சந்தோசம் முகத்தில்
அருகே அழைத்து அமர்த்தி
ஆசையாய் கன்னம் தடவி
அணைத்து , உச்சி முகர்ந்தாள் ...

மாறிவிட வில்லை...

பாசம் பொங்கும் என் பாட்டி ,
பழதானாலும் வயதானாலும்
இன்றும் அழகு தான்...
இன்னும் அழகு தான்...

Sunday, April 5, 2009

கலி காலம்

சட்டம் தட்டி கேட்காத கயவரை
சாமி தண்டிக்கும் என மனதுக்கு
சமாதானம் தேடி கோவிலுக்கு போனால்
சிலையை காணோம், கடத்தி விட்டார்கள் என்ற
புலம்பலில் பூசாரி...